திருப்பத்தூர் அருகே விபத்தில் 11 பேர் உயிரிழந்த வேனுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

தீ வைத்து எரிக்கப்பட்ட வேன்.
தீ வைத்து எரிக்கப்பட்ட வேன்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 11 பெண்கள் உயிரிழக்க காரணமாக இருந்த வேனை மர்ம நபர்கள் நேற்று தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய வேன் மூலம் சென்றனர்.

உயரமான பகுதியில் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் அங்குள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த 11 பெண்கள் உயிரிழந்தனர். மேலும்,20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனை, தருமபுரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த 11 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. 11 உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்த புலியூர் கிராம மக்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 11 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த வேன் விபத்து நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தாமல் அப்படியே இருந்தது. நேற்று அதிகாலை அந்த வேனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தீப்பற்றி எரிந்த வேன் எலும்புகூடாக இருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேனை தீ வைத்து கொளுத்தியது? யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in