Last Updated : 30 Mar, 2022 08:37 PM

 

Published : 30 Mar 2022 08:37 PM
Last Updated : 30 Mar 2022 08:37 PM

’குளிப்பதை வீடியோ எடுத்து  மிரட்டல்’ | சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை

தற்கொலை செய்வதற்கு முன் கல்லூரி மாணவி எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதம்.

கடலூர்: சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை என கடிதம் இருந்ததால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை 21 வயது கல்லூரி மாணவி எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து சிறிது காலம் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சொந்த ஊரில் இருந்துள்ளார். இன்று (மார்ச் 30) காலை அவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவி இறப்பதற்குமுன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தில், தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தாயார் கூறும்போது, காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மேஜையில் செல்போன் கொலுசு, கடிதம் இருந்ததாகவும், பின்னர் மகளைக் காணாமல் வீட்டின் பின்பக்கம் சென்று தேடியபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன் மகள் கடிதத்தில் குறிப்பிட்டவாறு இந்தச் செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை என்றும், இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x