காதலரை கட்டிப்போட்டுவிட்டு கல்லூரி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3-வது நபரும் திருப்பூரில் கைது

காதலரை கட்டிப்போட்டுவிட்டு கல்லூரி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3-வது நபரும் திருப்பூரில் கைது
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே மூக்கையூர் கடற்கரை பகுதியில் காதலரை கட்டிப்போட்டுவிட்டு, கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 3-வது நபரை திருப்பூரில் போலீஸார் கைதுசெய்தனர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணனும் அதே பகுதியைசேர்ந்த 21 வயது கல்லூரி மாணவியும் காதலித்து உள்ளனர். இவர்கள் கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் அருகே மூக்கையூர் கடற்கரை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 இளைஞர்கள் காதல் ஜோடியை மிரட்டி நகை, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர். பின்னர் ஹரிகிருஷ்ணனை தாக்கி துப்பட்டாவால் கட்டிப் போட்டுவிட்டு, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன், கடந்த 24-ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்தபோது, தனது கண் முன்னே காதலியிடம் 3 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் பதுங்கியிருந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன்(24), விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (20) ஆகிய இருவரையும் கடந்த 25-ம் தேதி பிடிக்க முயன்றனர். அப்போது சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தலைமைக் காவலர் கருப்பசாமி ஆகியோரை அவர்கள் கத்தியால் வெட்டினர். இதனால், இரு தரப்புக்கும் நடந்த மோதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இதில் தலைமறைவான 3-வது நபர் பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்(21), திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை அழைத்துவர தனிப்படையினர் சென்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in