Published : 26 Mar 2022 06:30 AM
Last Updated : 26 Mar 2022 06:30 AM

உதகை | தவறான நட்புக்கு இடையூறு என கருதி ஒரு வயது மகனை கொலை செய்த தாய் கைது

தவறான நட்புக்கு இடையூறு என கருதி, உதகையில் ஒரு வயது மகனை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா(38). இவரது கணவர் கார்த்திக் (40), கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்த நிலையில், மூத்த மகன் நித்தீஷ் தந்தையுடன் கோவையிலும், 2-வது மகன் நித்தின் தாயுடன் உதகையிலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தான். உடனடியாக உதகை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கீதா கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மர்ம மரணம் என வழக்கு பதிந்து உதகை நகர மத்திய போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கீதாவுக்கு ஏற்கெனவே இருவருடன் திருமணம் முடிந்துள்ளதும், அவர்களை விட்டு பிரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், சமூக வலைதளம் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, 3-வதாக கார்த்திக்குடன் திருமணம் செய்துள்ளார். அவர் மூலமாக 2 குழந்தைகள் பிறந்துள்ளன. பின்னர் கார்த்திக்கை பிரிந்த கீதாவுக்கு, மேலும் பலருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால், அவர் தனது குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

எனவே, குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதை அறிய, உடற்கூறு ஆய்வுக்காக குழந்தையின் உடல் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில், குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கீதாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கீதாவை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "3-வது கணவரை பிரிந்த கீதாவுக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி அவர் வெளியூர் சென்று வந்துள்ளார். குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. அதனுடன், அவரது தவறான தொடர்புக்கு குழந்தை இடையூறாகவும் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து, மதுபானமும் அளித்துள்ளார்.

இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது. பின்னர் எதுவும் தெரியாதது போன்று அழுதுகொண்டே குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். குழந்தை மீது எந்தவித காயமும் இல்லாததால், போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்துள்ளார். ஆனால், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x