

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக நிர்வாகி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன்(55). இவருக்குத் திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியின் அதிமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான அன்பரசனுக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இதனால், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அன்பரசன் திடீரென மருத்துவமனையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அன்பரசன் தற்கொலைக்கான காரணம் குறித்து செங்கல்பட்டு நகர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.