Published : 19 Mar 2022 04:15 AM
Last Updated : 19 Mar 2022 04:15 AM

மான் இறைச்சி வைத்திருந்த விவகாரம்: திருப்பத்தூர் அருகே இருவர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்துார் அருகே உயிரிழந்த மானை இறைச்சியாக்கிய 2 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாது மலையில் அவ்வப்போது மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாது மலை மாம்பாக்கம் வனப்பகுதியில் மான் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. அதனை, 2 பேர் இறைச்சியாக்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு மற்றும் வன குழுவினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், மட்றப்பள்ளி ஊராட்சி குமரன் நகரைச் சேர்ந்த சேட்டு (54). பெருமாள்(52) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்து, மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x