கோவை: கிரெடிட் கார்டு பராமரிப்பு கட்டணம் எடுப்பதாக கூறி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நூதனமாக பணம் திருட்டு

கோவை: கிரெடிட் கார்டு பராமரிப்பு கட்டணம் எடுப்பதாக கூறி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நூதனமாக பணம் திருட்டு
Updated on
1 min read

கிரெடிட் கார்டு (கடன் அட்டை) பராமரிப்பு கட்டணம் எடுப்பதாக கூறி தகவல்களைப் பெற்று வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நூதன முறையில் பணம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காங்கயம்பாளையம் அமர்ஜோதி சப்தகிரி நகரை சேர்ந்தவர் டி.மணியன் (47). இவர் பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். இவரது அலைபேசி எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில், கிரெடிட் கார்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் எடுக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடுதல் விவரங்களுக்கு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இணையதளத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு சேவைக்கான வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணை மணியன் தேடியுள்ளார். அப்போது, இணையதளத்தில் இரு அலைபேசி எண்கள் கிடைத்துள்ளன. அதில் குறிப்பிட்ட ஒரு அலைபேசி எண்ணில் அழைத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் கிரெடிட் கார்டு எண் மற்றும் பிற விவரங்களைக் கேட்டுள்ளார். அதோடு, ஏடிஎம் அட்டையின் விவரங்களை கேட்க, மணியனும் கேட்ட தகவல்களை அளித்துள்ளார்.

தகவல் அளித்த சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூ.46,487 மற்றும் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.27,559 பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் மணியன் புகார் அளித்தார். கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in