Published : 16 Mar 2022 10:29 AM
Last Updated : 16 Mar 2022 10:29 AM

மத்திய தொழில் படை காவலரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1.14 லட்சம் மோசடி

ராமநாதபுரம்

பரமக்குடியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரின் வங்கிக்கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் ரூ.1.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சோமநாதபுரம் முத்துநகரைச் சேர்ந்தவர் லங்காராம். இவரது மகன் ராமச்சந்திரன், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 27-ம் தேதி ராமச்சந்திரனின் கைபேசி எண்ணுக்கு, அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த செய்தியில் ராமச்சந்திரனின் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கில் இணையதள வசதி மற்றும் ஏடிஎம் கார்டு முடங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

அதனையடுத்து அவரது கைபேசிக்கு பரமக்குடி பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து பேசுவதாக இந்தியில் பேசிய நபர் உங்கள் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றால், பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் கூறியபடி பான் கார்டை ராமச்சந்திரன் அப்டேட் செய்து, அதற்கான ரகசிய எண்ணையும் அந்த நபரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து பல தவணைகளில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,14,332 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

அதன்பின் தனக்கு பதிலாக தனது தந்தையை சைபர் கிரைமில் புகார் அளிக்க கூறியுள்ளார். அதன்படி லங்காராம் புகார் அளித்தார். தொடர்ந்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x