Last Updated : 14 Mar, 2022 06:17 PM

 

Published : 14 Mar 2022 06:17 PM
Last Updated : 14 Mar 2022 06:17 PM

நாமக்கல் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சி. வேலுச்சாமி. இவர் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி ஓட்டும் பெண் தொழிலாளி ஒருவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இச்சூழலில் கடன் பெற்ற தொழிலாளியின் மகளை கந்து வட்டிக் கும்பல் மிரட்டி பாலியல் பலத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இதையறிந்த வேலுச்சாமி சம்பவம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பல் சிவக்குமார், பூபதி, ராஜேந்திரன், மிலிட்டரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ஆமையன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

கொலையான வேலுச்சாமி

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி சிவக்குமார், மிலிட்டரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ராஜேந்திரன், பூபதி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 20 ஆயிம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆறாவது குற்றவாளியான பூபதி தலைமறைவான நிலையில், அவருக்கும் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட சிவக்குமார் பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளார். மேலும், வழக்கில் தொடர்புடைய ஆமையன் வழக்கு விசாரணை காலக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x