Published : 14 Mar 2022 07:15 AM
Last Updated : 14 Mar 2022 07:15 AM

ஆவடியில் மீன் வியாபாரி, ஆட்டோ ஓட்டுநர் கொலை

திருவள்ளூர்: ஆவடியில் ஆட்டோ ஓட்டுநர், மீன் வியாபாரி ஆகிய இருவரும் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நேரு பஜார், மசூதி தெருவைச் சேர்ந்தவர் அசாருதீன் (27). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவரது நண்பர் சுந்தர்(29) வசந்தம் நகர், சிவகுரு நகரில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் வெளியே சென்ற இவர்கள், இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பாததால், அவர்கள் இருவரின் மனைவிகளும் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் தங்களின் கணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ஓசிஎஃப் தொழிற்சாலையின் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இருவரின் உறவினர்களும் அங்கு சென்றனர். இச்சம்பவம் குறித்து நள்ளிரவில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு சுந்தர், அசாருதீன் தங்களது நண்பர்களான ஜெகன், யாசின் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. முன்விரோதம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x