பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸை’ கடத்த முயற்சி: திண்டிவனத்தில் 4 பேர் கைது

பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸை’ கடத்த முயற்சி: திண்டிவனத்தில் 4 பேர் கைது
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘அம்பர் கிரிஸ்’ எனப்படும் திமிங்கில கழிவுகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமிங்கலம் வாய் வழியாக வெளியேற்றும் ‘அம்பர் கிரிஸ்’ பல கோடி மதிப்புள்ளது. மருந்துப் பொருளாகவும், வாசனை திரவியத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த திமிங்கல கழிவு, திண்டிவனம் நகர் முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அங்குள்ள மோகனரங்கன் (62) என்பவரின் வீட்டில் ரோஷணை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மோகனரங்கன் வீட்டுக்கு 2 பைக்குகளில் 2 பைகளுடன் வந்த 4 பேர், போலீஸாரை கண்டதும் தப்ப முயன்றனர். அந்த பைகளை சோதனை செய்ததில் 14.75 கிலோ எடை உள்ள ‘அம்பர் கிரிஸ்’ இருந்தது.

அவர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (33), லட்சுமிபதி(33), பொளம்பாக்கத்தை அடுத்த மலுவை கரணை பகுதியைச் சேர்ந்த முருகன் (32), திண்டிவனத்தை அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (34) என்பது தெரியவந்தது.

இவர்களில், மோகனரங்கன் தப்பிச் செல்வதற்காக மாடியில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் கழிவுப் பொருட்களை வனத்துறையிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சந்திரசேகர், லட்சுமிபதி, முருகன், சத்தியமூரத்தி ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in