

திருப்பூர்: திருப்பூரில் அடகுக் கடையில் 12 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற பிஹாரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என். காலனி 3-வது வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு முன்புறம் நகை அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இரவு நகை அடகுக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை கடையைத் திறக்கச் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரேக்குகளில் இருந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்போது 3 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். நகை அடகுக் கடையில் பதிவாகி இருந்த கைரேகையை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதற்கிடையே அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் 4 பேர் கொண்ட கும்பலின் உருவம் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதியின் அருகில் திருப்பூர் ரயில் நிலையம் இருப்பதால் கொள்ளையர்கள் ரெயிலில் ஏறி தப்பித்து சென்றிருக்கலாம்? என போலீஸார் சந்தேகித்தனர். அப்போது அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் 4 பேர் பதிவாகியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்தக் கும்பலைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் ஒரு தனிப்படை சென்னைக்கும், சந்தேகிக்கப்படும் நபர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மற்றொரு தனிப்படை மராட்டியத்திற்கும் விரைந்தது. இந்நிலையில் நேற்று இரவு கொள்ளை கும்பல் சென்னையில் இருந்து திரிபுராவிற்கு ரெயிலில் சென்றது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் மராட்டிய மாநிலம் பல்லர்பூர்நகரம் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகித்த 4 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மாதப் ஆலம் (37), பத்ரூல் (20), முகமது சுபான் (30), திலாகஸ் (20) என்பவதும் திருப்பூர் அடகு கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 3 கிலோ 306 கிராம் தங்கம் மற்றும் 28 கிலோ வெள்ளி, ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது.
இதனை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருப்பூர் போலீஸாரிடம், மராட்டிய போலீஸார் ஒப்படைக்க உள்ளனர். மேலும், இவர்கள் வெளிமாவட்டங்களில் வேறு ஏதேனும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.