கடலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு வாபஸ்

கடலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு வாபஸ்
Updated on
1 min read

கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த அறையின் சாவி தொலைந்து விட்டதாகக் கூறி, பூட்டைஉடைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதுதொடர்பாக மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த பிப். 23 அன்று மனு ஒன்றை அளித்தார். அதில்,‘‘ அந்த பாதுகாப்பு அறையை திறப்பதற்கு முன்பாக எந்தக் கட்சி பிரதிநிதிகளையும் அழைக்காமல் பூட்டை உடைத்து கதவைத் திறந்த மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது.

எனவே வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்து மீண்டும் மறுதேர்தல் நடத்த வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகராட்சி 35-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதி்ல், அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை பாதிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே பாதுகாப்பு அறை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்து, மீண்டும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மனுவை பரிசீலிக்க வேண்டும்.

அதுவரை நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ள கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது இந்த விவகாரத்தை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும், என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in