

மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (64). இவர், மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரிடம் விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி இரு ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் ஏழுமலை இழுத்தடித்து வந்துள்ளாராம். இதனால் கோபமடைந்த கோபால் (50), அவரது மனைவி விசாலாட்சி (45), மகன் சிவா (19) ஆகிய மூவரும் கடந்த 23-ம் தேதி,ஏழுமலையின் வீட்டிற்குச் சென்று, பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் காயமடைந்த ஏழு மலை திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் (பிப்.25) ஏழுமலை உயிரிழந்தார். ஏழுமலையின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவா மற்றும் அவரது தந்தை கோபால், தாயார் விசாலாட்சி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.