

கும்பகோணம்: கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் இளையராஜா(42), சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றி வந்தார். கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் நெய்வாசல் கீழ் தெருவை சேர்ந்தவர் அனிதா(35). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இளையராஜாவும், அனிதாவும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனார். இந்நிலையில், இளையராஜா பிப்.23-ம் தேதி நெய்வாசலில் உள்ள மனைவி அனிதா வீட்டுக்கு வந்து, தங்கியுள்ளார். ஆனால், மறுநாள் (பிப்.24) இளையராஜா அங்குள்ள வாய்க்கால் கரையில் உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இந்த கொலை குறித்து பந்தநல்லூர் போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே, அனிதா நேற்றுமுன்தினம் பந்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமியிடம் ஆஜராகி, தனது கணவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனிதாவை கைது செய்து, போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், இளையராஜாவின் சித்தப்பா மகனான குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால்(28) என்பவருக்கும், அனிதாவுக்கு கூடா நட்பு இருந்த நிலையில், அதுகுறித்து இளையராஜா தகராறு செய்ததால், அவரை, அனிதாவும் ஜெயபாலும் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள ஜெயபாலை போலீஸார் தேடி வருகின்றனர்.