

நாமக்கல்: விசைத்தறி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 32 லட்சம் ரொக்கம், 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வேமன்காட்டுவலசை சேர்ந்தவர் விசைத்தறி உரிமையாளர் விமல் (40). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையத்துக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் விமல் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கிரில் கேட் பூட்டு, வீட்டுக் கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 32 லட்சம் ரொக்கம், 60 பவுன் தங்க நகை ஆகியவை திருடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த குமாரபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். எனினும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் எனத் தெரியவில்லை.
இதனிடையே அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் பார்வையிடப்பட்டன. மேலும், தடயவியல் நிபுனர்களின் உதவியுடன் கைரேகைகள் பதிவுகளை சேகரித்து, பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.