ஜெயங்கொண்டம்: வழக்கறிஞர் கத்தியால் குத்திக் கொலை; 4 பேருக்கு போலீஸ் வலை

படம் - கொலை செய்யப்பட்ட அறிவழகன்.
படம் - கொலை செய்யப்பட்ட அறிவழகன்.
Updated on
1 min read

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர், 4 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடையார் பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதே தெருவில் வசிக்கும் இலக்கியா பிரபு என்பவர் உடையார்பாளையம் பேரூராட்சியில் 15-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக அறிவழகன் செயல்பட்டதாக தெரிகிறது. இதற்கு அறிவழகன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அறிவழகனுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள தெரு பகுதியில் நின்று பேசிக்கொண்டிந்த வழக்கறிஞர் அறிவழகனை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தினர். அறிவழகனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினரிடம் 4 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் குண்டுகளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தாக்குதலில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த அறிவழகனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in