விழுப்புரம்: பணத்திற்காக மூதாட்டியை கொன்ற சிறுவன்

விழுப்புரம்: பணத்திற்காக மூதாட்டியை கொன்ற சிறுவன்
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் போலீஸில் பிடிபட்டான்.

விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி செல்லபாக்கியம் (65). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்லபாக்கியத்தை தேடி வந்தனர்.

செல்லபாக்கியத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின்பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்லபாக்கியத்திடம் அந்த சிறுவன் ரூ.2 ஆயிரம் திருடியுள்ளான். இதையறிந்த செல்லபாக்கியம், அந்த சிறுவனை பார்க்கும் போது எல்லாம் தன்னிடம் திருடிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.

கடந்த 13ம் தேதி இரவு தனது பாட்டி வீட்டில் இருந்த சிறுவனிடம், செல்லபாக்கியம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அச்சிறுவன், செல்லபாக்கியத்தை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கதிர்வேல் என்பவரது வீட்டின் செப்டிக் டேங்கில் செல்லபாக்கியத்தின் உடலை போட்டு மறைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடலை போலீஸார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in