உசிலம்பட்டி அருகே பைப் வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பக்கத்து வீட்டு பெண், 6 மாதக் குழந்தை காயம்

உசிலம்பட்டி அருகே பைப் வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பக்கத்து வீட்டு பெண், 6 மாதக் குழந்தை காயம்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது வீட்டு மாடியில் நேற்று காலை திடீரென வெடிச் சத்தம் கேட்டது. இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு 40 அடி தூரத்தில் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தார். தகவலின்பேரில் டிஎஸ்பி நல்லு மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மாடி வீட்டின் சில அறைகள் இடிந்தன.

போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவர் செக்கானூரணி அருகில் உள்ள தேங்கல்பட்டி தர்மராஜ் மகன் அஜித்குமார் (27) என்பதும், செல்போன் கடை ஊழியரான இவரை விஷேசத்துக்கு வெடிபோடுவதற்காக வரவழைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த வெடி விபத்தில் காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த வனிதாவும் (27), அவரது 6 மாத குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தலைமறைவான பிரவீனை தேடுகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: விபத்தை ஏற்படுத்தியது பைப் வெடி. இவை வாணவெடிக்குப் பயன்படுத்தக்கூடியது. இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. வெடிவிபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருக்கின்றன.

பிரவீன் பைப் வெடிகளை தயாரித்தாரா அல்லது வாங்கி வந்து விற்றாரா என அவரைப் பிடித்து விசாரித்தால்தான் தெரியும். பைப் வெடிகளை வெடிக்க வைத்த அனுபவம் அஜித்குமாருக்கு உண்டு. இதனால் அவரை வரவழைப்பது வழக்கம். அதற் காக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதன்படியே நேற்றும் அவர் வந்துள்ளார். பிரவீன் மனைவி பூமாதேவியை (35) கைது செய்து விசாரிக்கிறோம். பிரவீனை தேடி வருகிறோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in