

சென்னை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், “ பாஜக அலுவலகத்தில் இன்று அதிகாலை 01.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாம்பலம் காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு பழைய குற்றவாளி வினோத் (௭) கருக்கா வினோத் என்பவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கருக்கா வினோத்தை கைது செய்து செய்தனர். விசாரணையில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் வினோத் ஈடுபடவில்லை என்பதும்,பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளதும், ஏற்கனவே 2015மஆம் ஆண்டு மாம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர் வினோத் (௭) கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.