மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் உட்பட 6 பேருக்கு ஜாமீன் மறுப்பு

மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் உட்பட 6 பேருக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீரோ மலங்கரா டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம் கோட்டயத்தைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ் என்பவருக்கு 2019-ல் டயோசீசன் சார்பில், 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.

எம்.சாண்ட் குவாரிக்காக அனுமதி பெற்ற அந்த இடத்தில், அருகில்உள்ள ஓடையில் இருந்து ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக எடுத்து கடத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரித்த அப்போதைய சார் ஆட்சியர் பிரதீப் தயாள் ரூ.9.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். மனுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர் மீது சில மாதங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார், பத்தனம் திட்டா சீரோ மலங்கரா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜிஜோ ஜேம்ஸ்(37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலாயில்(53) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், பிஷப் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நடுவர் கடற்கரை, ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களை நேற்று தள்ளுபடி செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in