Published : 09 Feb 2022 08:17 AM
Last Updated : 09 Feb 2022 08:17 AM

திருப்பத்தூர்: முடிதிருத்தும் தொழிலாளி மரணத்தில் சந்தேகம்: உடற்கூறு ஆய்வு நடத்தக்கோரி சாலை மறியல்

முடி திருத்தும் தொழிலாளி மரணத்தில் மர்மம் நீடிப்பதால் அவரது உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் எனக்கோரி திருப்பத்தூர் - தி.மலை சாலையில் பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி நவீன்குமார்(29). இவரது மனைவி விசித்ரா(24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி காலை வீட்டில் இருந்த நவீன்குமாரை அவரது நெருங்கிய நண்பரும், உறவினருமான சீனிவாசன் என்பவர் கட்டாயப்படுத்தி மது அருந்த அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மது அருந்திய சிறிது நேரத்திலேயே நவீன் குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்தார். உடனே அவரை சீனிவாசன் மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

மது மயக்கத்தில் இருந்த நவீன்குமார் அன்று மாலை 6 மணியளவில் சுயநினைவு இழந்து விட்டதாக அவரது மனைவி விசித்ரா அக்கம், பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதார். இதைத்தொடர்ந்து, நவீன்குமாரை திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன்குமார் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

மதுபோதையில் நவீன்குமார் உயிரிழந்ததாக விசித்ரா கூறியதை நம்பிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீன்குமாருக்கு மறுநாள் இறுதி சடங்கு செய்து அருகில் உள்ள மயானப்பகுதியில் உடலை அடக்கம் செய்தனர்.

இதையடுத்து, விசித்ராவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த நவீன்குமாரின் தாயார் சாந்தி மருமகளுக்கு தெரியாமல் அவரது செல்போனை சோதனை செய்தார். அதில் சீனிவாசனிடம், விசித்ரா அடிக்கடி பேசி வருவதும், வாட்ஸ் -அப் மூலம் பல தகவல்களை பரிமாறிக்கொண்ட தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, நவீன்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாந்தி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் - திருவண்ணாமலை பிரதான சாலை தண்ணீர் பந்தல் அருகே நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அதில், நவீன்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும், அவரது மனைவி விசித்ராவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முழுக்கமிட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்துார் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையிலான கிராமிய காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நவீன்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், விசித்ரா விடம் விசாரணை நடத்தி உண்மை நிலவரம் கண்டறியப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனையேற்று மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x