Published : 31 Jan 2022 09:47 AM
Last Updated : 31 Jan 2022 09:47 AM

அரசு பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டில் லஞ்ச வழக்கில் கைதான ஆம்பூர் நில அளவையர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.23 லட்சம் பறிமுதல்

கைதான பாலாஜி.

வேலூர்

அரசுப்பணியில் சேர்ந்து ஒன்றரை வருடத்தில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் வீட்டில் விடிய, விடிய நடந்த சோதனையில் கணக்கில் வராதப் பணம் ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் சேண் பாக்கம் கழனிக்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவரது தந்தை நில அளவை யாராக பணியாற்றி வந்த போது கடந்த 2017-ம் ஆண்டு பணியின் போது உயிரிழந்தார். இதையடுத்து, பாலாஜிக்கு கருணை அடிப்படையில் நில அளவை யாராக பணி ஆணை வழங்கப் பட்டது. ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை யாராக பணியாற்றி வந்த பாலாஜி நிலத்தை அளந்து பிரித்து பதிவு செய்ய பலரிடம் லஞ்சப்பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பணியில் சேர்ந்ததும் லஞ்சம் பெறும் பழக்கத்தை பாலாஜி ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்த சேகர் (25) என்பவர் கடந்த ஆண்டு மின்னூர் பகுதியில் 22 சென்ட் நிலம் மற்றும் 3 வீட்டு மனைகளை வாங்கியுள்ளார். இந்த 4 இடங்களையும் அளந்து பிரித்து உட்பிரிவாக மாற்றி தர ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, சேகர் இடத்தை அளந்து உட்பிரிவாக மாற்றித்தர பாலாஜி ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதன்பிறகு நடந்த பேரத்தில் ரூ.8 ஆயிரம் தருவதாக சேகர் ஒப்புக் கொண் டார். ஆனால், லஞ்சம் தர விரும்பாத சேகர், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அளித்த ஆலோசனை பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவல கத்துக்கு சென்ற சேகர், அங்கு நில அளவையர் பாலாஜியிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பாலாஜியை கைது செய்தனர்.

இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், அவரது வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராதப்பணம் 22 லட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பாலாஜி வீட்டின் அலமாரி, புத்தகம் நடுவில், சலவை செய்யப்பட்ட சட்டை, பேண்ட் பாக்கெட்கள், மேஜை அறை, வீட்டுக்கு வந்த கல்யாண பத்திரிகை கவர், படுக்கைக்கு அடியில் என பல இடங்களில் லஞ்சமாக வாங்கிய பணத்தை பாலாஜி பத்திரப்படுத்தியிருந்தார்.

அவரது வீட்டை அங்குலம், அங்குலமாக சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் மொத்த பணத்தையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பாலாஜி நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசுப்பணியில் சேர்ந்த ஒன்றரை ஆண்டில் லஞ்ச வழக்கில் நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணை அடிப்படையில் பணி

கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்த பாலாஜி குறுக்கு வழியில் பெரிய பணம் சம்பாதிப்பையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணியில் சேர்ந்த நாள் முதல் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் முதல் நீண்ட காலமாக நிலத்தை அளக்க மனு அளித்தவர்கள் என அனைவரது விண்ணப்பங்களையும் அலசி, ஆராய்ந்து விண்ணப்பதாரர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கூறியபடி நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து அதை பதிவு செய்து கொடுத்து வந்துள்ளார்.

பணம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளக்க முடியும் என்று சொல்லாமல் வேலை முடித்துக்கொடுத்த பிறகு சிலரிடம் பணத்தை பெற்றுள்ளார். லஞ்சமாக வாங்கிய பணத்தை கொண்டு தனது வீட்டின் அருகே அடுக்குமாடி வீடு ஒன்றையும் அவர் கட்டி வந்துள்ளார். அவரது அறையில் படுக்கையை அகற்றி பார்க்கும் போது, அழுக்குபடிந்த ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x