Published : 30 Jan 2022 09:05 AM
Last Updated : 30 Jan 2022 09:05 AM

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வீட்டில் திருட்டு- தனிப்படை போலீஸார் விசாரணை

திருப்பூர்

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக ப.தனபால் உள்ளார்.தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர், மனைவி கலைச்செல்வியுடன் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச் லேண்ட் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு சேலத்துக்கு சென்றுள்ளார்.

கடந்த 27-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு அவரது வீட்டுக்குள் புகுந்தமர்ம நபர்கள், பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றனர். மேலும், அவர் வாடகைக்கு எடுத்திருந்த மற்றொரு வீட்டிலும் திருட முயன்றனர். தகவலின்பேரில் திருமுருகன்பூண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, மர்ம நபர்கள் 4 பேர் தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக ப.தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில், திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்து, 2 தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா பதிவைக்கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் அடையாளங்களைக் கொண்டு, இந்த திருட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால், வடமாநிலதொழிலாளர்கள் பணிபுரியும் பின்னலாடை நிறுவனங்களிலும் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான, சில முன்னாள் குற்றவாளிகளையும் கணக்கில் எடுத்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x