Published : 24 Jan 2022 01:40 PM
Last Updated : 24 Jan 2022 01:40 PM

ஜெயங்கொண்டம்: சிறுமியை திருமணம் செய்துகொண்டவர் கைது; உடந்தையாக இருந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்தவரை கைது செய்த போலீஸார், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த 2 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ்(32). மரம் வெட்டும் வேலை பார்த்து வரும் இவர், புரந்தானை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்ற நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார்.

தற்போது, அச்சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது, மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலருமான கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார், சிறுமியை திருமணம் செய்த அடைக்கலராஜை கைது செய்தனர். மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி, சிறுமியின் தாய் ஆகியோர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x