Published : 20 Jan 2022 10:13 AM
Last Updated : 20 Jan 2022 10:13 AM

திருவண்ணாமலை அருகே பெண் எரித்து கொலை?

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மேல்பானாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு தேவகி (51), இந்திராகாந்தி என்ற இரண்டு மனைவிகள். ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதில், தேவகிக்கு குழந்தைகள் இல்லை. இந்திராகாந்திக்கு 3 மகன்கள், 1 மகன் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில், ஒரே மகனான மணிகண்டன் விவசாய வேலை செய்து வருகிறார். அவருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதற்கிடையில், மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு உறங்கினார். வீட்டின் வராண்டா பகுதியில் தேவகி தனியாக உறங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் தேவகி திடீரென கூச்சலிட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உள்ளிட்டோர் எழுந்து சென்று பார்த்தபோது தேவகி தீயில் எரிந்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தேவகி உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் மங்கலம் காவல் துறையினர் விரைந்து சென்று தேவகியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது குடும்பத்தினரே தீ வைத்து எரித்தார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக வெளி நபர்கள் யாராவது அவரை தீ வைத்து எரித்தார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x