Published : 19 Jan 2022 12:08 PM
Last Updated : 19 Jan 2022 12:08 PM

சென்னை: முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை: முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தரமணி கருமாரியம்மன் கோயில் முதல் தெருவில் வசிப்பவர் பிரபா (45). இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் மத்திய கைலாஷ் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது, அந்த வழியே வந்த இளைஞர் ஒருவர் முகவரி கேட்பதுபோல நடித்து, பிரபாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத பிரபா, சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டு தடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், திடீரென கத்தியால் பிரபாவின் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டூர்புரம் கெனால் பேங்க் சாலைபகுதியைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கெனவே அபிராமபுரம் மற்றும் தரமணி காவல் நிலையங்களில் திருட்டுவழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x