Published : 19 Jan 2022 09:05 AM
Last Updated : 19 Jan 2022 09:05 AM

ஆம்பூர்: ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் உணவகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்

ஆம்பூர் அருகே ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் உணவகத்தை அடித்து நொறுக்கி உணவக ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ்(53) என்பவர் தாபா உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் மதிய உணவு சாப்பிட வந்தனர். உணவக ஊழியர்களிடம் உணவு ஆர்டர் செய்தனர். ஆர்டர் செய்த உணவு வகைகள் உடனடியாக கொடுக்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், உணவு வர தாமதமானதால், ஆத்திரமடைந்த அவர்கள் உணவக ஊழியர்களிடம் தகராறு செய்து 6 பேரும் ஒன்று சேர்ந்து, உணவகத்தில் இருந்த, மேஜை, நாற்காலி, சமையல் பொருட்கள் அங்கிருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இதனை தடுக்க வந்த உணவக ஊழியர்களை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் உணவக உரிமையாளர் முகமது யூனிஸ் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உணவக கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x