திருப்பூர்: திருடிய பணத்தை பங்கு போடுவதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கொலை; நண்பர்கள் 3 பேர் கைது

திருப்பூர்: திருடிய பணத்தை பங்கு போடுவதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கொலை; நண்பர்கள் 3 பேர் கைது
Updated on
1 min read

திருடிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில், திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரணவன் (27). இவர், திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இந்நிலையில், திருப்பூர் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் அவர் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீஸார்சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், சரவணனை அவரது நண்பர்கள் நன்னுபிரசாத் (24), சித்திக் பாஷா (30), மனோஜ் (21) ஆகிய 3 பேர் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க மாநகரக்காவல் ஆணையர் உத்தரவின்பேரில், போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம்நத்தம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அங்கு சென்று 3 பேரையும் பிடித்து, திருப்பூர் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், புதிய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இருந்த ஒருவரிடம் இருந்து, 4 பேரும் சேர்ந்து பணத்தை திருடியுள்ளனர். அந்த பணத்தை அனைவரும் பங்கிட்டுக் கொள்ளும்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்து 3 பேரும் சேர்ந்து சரவணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

3 பேரையும் வடக்கு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in