Published : 16 Jan 2022 07:41 AM
Last Updated : 16 Jan 2022 07:41 AM

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார்

சென்னை

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு வழங்க இருந்த பரிசுத்தொகையான ரூ.1 லட்சத்தை திருடி சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

அப்போது நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி வட்டச்செயலாளரான வெங்கடேசன் ரூ.1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் திடீரென பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர்ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு, உதயநிதி ஸ்டாலின் புறப்படும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடி செல்வது தெரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சிஅடைந்த வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.அதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (52)என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்தியதாக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x