இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விபத்து: மதுரவாயல் அருகே லாரி மோதி 2 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விபத்து: மதுரவாயல் அருகே லாரி மோதி 2 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது, லாரி மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் செல்வம் (36). டிரைவர். இவரது மனைவி சுமலதா (29). இவர்களது மகன்கள் ஆதிரன்(4), கவுசிக்(2). இவர்களது உறவினர் நேற்று சபரி மலைக்குப் புறப்பட்டதால், மகாலிங்கபுரத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற செல்வம், அவர்களை வழியனுப்பிவிட்டு நேற்று மதியம் மீண்டும் இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மதுரவாயல் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த டிரை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் செல்வம் உள்ளிட்ட 4 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் ஆதிரன், கவுசிக் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த செல்வம், சுமலதா ஆகியோரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், சிறுவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், லாரி ஓட்டுநர் தென்காசி ராமையாவை(44) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in