Published : 12 Jan 2022 08:37 AM
Last Updated : 12 Jan 2022 08:37 AM

கோவை: பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு

கோவை: கோவை அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ந்த மோதலில், கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும், அப்பள்ளியில் பயின்று தற்போது ஐடிஐ படித்துவரும் மாணவருக்கும் கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக இரு தரப்பிலும் மாணவர்கள் திரண்டு மோதிக்கொண்டனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 3 பேர் கத்திக்குத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆலாந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஐடிஐ மாணவர் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். மேலும், ஐடிஐ மாணவரைக் கிண்டல் செய்ததாக பிளஸ் 1 மாணவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எஸ்.நந்தகுமார் என்ற மாணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது.

உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை முன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஸ்கோர்ஸ் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘‘மாணவர்கள் மோதல் குறித்து முறையாக தகவல் அளிக்காத பள்ளி நிர்வாகம் மீதும், சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x