

கோவை: கோவையில் பவுண்டரி உரிமையாளரிடம் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, ரூ.1.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (46). இவர், கணபதி பகுதியில் பவுண்டரி நிறுவனம் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரிடம் அலைபேசியில் பேசிய விக்கி என்பவர், ரூ.10 லட்சம் தொழில் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், இதற்காக ரூ.1.5 லட்சம் கமிஷன் தந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அலைபேசியில் பேசிய நபரிடம் தனது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சுகுமார் அளித்துள்ளார்.
கடந்த 7-ம் தேதி கணபதி பகுதியில் வைத்து சுகுமாரை சந்தித்த விக்கி, ஹரி என்ற பெயரிலான இருவர் ரூ.10 லட்சம் தொகையை கொடுத்துவிட்டு, ரூ.1.5 லட்சம் கமிஷன் பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற பிறகு பணத்தைப் பார்த்த சுகுமார், ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து அளிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சரவணம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.