

மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் (32). விவசாயியான இவர்,13 ஏக்கரில் கடந்தாண்டு தர்பூசணி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை நடவு செய்தார்.
கரோனா தொற்றின் காரனமாக, விளைந்த தர்பூசணி உள்ளிட்டவை நிலத்திலேயே தேங்கி, அழுகி நாசமானது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் நடவு செய்த பயிர்கள் தொட்ர் மழையால் பயிர்கள் சேதமானது. இதன் காரணமாக அவர் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2-ம்தேதி செந்தில் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து விட்டு, தனது நிலத்திலேயே மயங்கினார். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மரக்காணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.