சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை: ரயில்வே ஊழியரைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கைவரிசை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை: சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் 1.32 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் பணிபுரிந்து வருபவர் டீக்காராம் மீனா. நேற்று இரவு அவர் இங்கு பணியில் இருந்தார். பயணிகளுக்கு முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை வழங்கிக் கொண்டிருந்தார். பயணிகள் யாரும் அற்ற நேரத்தில் அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கவுன்ட்டருக்கு வந்து அவரைக் கட்டிப்போட்டுவிட்டு. 1,32,500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோதுதான் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது. இன்று காலை நீண்டநேரமாக டிக்கெட் கொடுப்பவருடைய கதவு திறக்கப்படவில்லை என்பதை அறிந்த பயணிகள் இதனால் சந்தேகம் ஏற்பட்டு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பிறகு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பூட்டை உடைத்துக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போலீஸார், டீக்காராம் மீனா என்பவர் கை கால்களையும், வாயையும் கட்டிப் போடப்பட்டிருப்பதும் கவுன்ட்டருக்குள் படுத்துக் கிடந்தையும் கண்டனர்.

உடனே அவரை விடுவித்து அவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப்போட்டுவிட்டு 1,32,500 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாணை மேற்கொண்டு வருகிறார்கள். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் தற்போது காவல்துறையினர் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இரவு வந்து கொள்ளையடிக்கச் சென்றவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பன போன்ற விசாரணையும் நடத்திவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in