Published : 26 Dec 2021 09:23 AM
Last Updated : 26 Dec 2021 09:23 AM

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டை பறிமுதல்

திருவள்ளூர்: திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமாரின் தனிப்படை காவல் துணை ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் செம்மரம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சரக்கு வாகன ஆட்டோவில் சோதனை செய்தபோது, கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் கொம்பு, கட்டுமான தகரங்களுக்கு அடியில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 23 செம்மரக் கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த நபரையும் பிடித்தனர். மேலும், சரக்கு வாகனத்துக்கு பாதுகாப்பாக வந்த சொகுசு கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் வந்தநபர் ஆகியோரையும் பிடித்தனர்.

பிடிபட்ட நபர்கள் சீனிவாசன், பரணி ஆகிய இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, ஜானக புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அஜித் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். இவை திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வனத்துறையினர் இது குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x