Published : 25 Dec 2021 10:23 AM
Last Updated : 25 Dec 2021 10:23 AM

பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் கைது, மற்றொரு ஆசிரியர் தலைமறைவு

ராமநாதபுரம் / கோவை

பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசுஉயர்நிலைப் பள்ளியில் பலகிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கடந்த 7-ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரிடம் மாணவிகள் சிலர் பள்ளியின் கணித ஆசிரியர்ஆல்பர்ட் வளவன் பாபு(40),சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா(39) ஆகிய இருவரும், பாலியல்ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு தருவதாக புகார் கூறினர்.

இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் பலர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு அலுவலர் வசந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில், பரமக்குடி மகளிர் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஆல்பர்ட் வளவன் பாபு, ராமராஜா ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தார். இதில் ராமராஜா கைது செய்யப்பட்டார். தலைமறைவான ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

கோவை வெள்ளலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக விஜய்ஆனந்த்(40) பணிபுரிகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போத்தனூர் போலீஸார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விஜய்ஆனந்த்தை பணியிடை நீக்கம் செய்து, கல்வித்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x