Last Updated : 23 Nov, 2021 05:16 PM

 

Published : 23 Nov 2021 05:16 PM
Last Updated : 23 Nov 2021 05:16 PM

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவன் - மாணவி மர்ம மரணம்: ஆணவக் கொலையா? என விசாரணை

கோப்புப் படம்

தமிழகம்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச் சந்தல் கிராமத்தைச் சேர்ந்த அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவனும், மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திடீரென மாயமாகியுள்ளார். மாணவி மாயமானதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து மாணவி பயன்படுத்தி வந்த செல்போனைக் கொண்டு போலீஸார் மாணவியைத் தேடி வந்தனர்.

இதனிடையே இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி ஆற்றங்கரைப் பகுதியில் மாணவன் ஆற்றுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையிலும், மாணவி ஆற்றுப் பகுதியில் மிதந்த படியும் சடலங்களாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மாணவர்கள் இருவரின் சடலங்களும் இருவேறு இடங்களில் மீட்கப்பட்டதால், ஆணவக் கொலையா என்ற கோணத்தில் கச்சிராயபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x