Published : 12 Nov 2021 03:03 PM
Last Updated : 12 Nov 2021 03:03 PM

கரூரில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை; ரூ.1.60 லட்சம் அபராதம்

கரூரில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் கணபதி (61). இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 10, 12, 13 வயதுடைய 3 சிறுமிகள் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம், பொங்கல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அப்போது அச்சிறுமிகளுக்குத் தனித்தனியே பல முறை பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளார்.

இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு போலீஸில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு, கணபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து இன்று (நவ.12-ம் தேதி) தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x