Last Updated : 24 Oct, 2021 08:15 PM

 

Published : 24 Oct 2021 08:15 PM
Last Updated : 24 Oct 2021 08:15 PM

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பிரபல ரவுடி பாம் ரவி உட்பட இருவர் கொலை

புதுச்சேரி

புதுச்சேரியில் பிரபல ரவுடி உட்பட இருவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) பாம் ரவி (33). ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. ரவி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்தார். இன்று(அக். 24) மோட்டார் பைக்கில் ரவி, வாணரப்பேட்டை முருகசாமி நகரைச் சேர்ந்த தனது நண்பரான பரிடா அந்தோணி ஸ்ரீபன் (28) என்பவருடன் வாணரப்பேட்டை அலோன் வீதி-ராஜராஜ வீதி சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், ரவியின் மோட்டார் பைக்கை மறித்து நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளது. இதில் ரவி, அந்தோணி ஆகியோருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. உடனே உஷாரான பாம் ரவி, மோட்டார் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓடியுள்ளார்.

அப்போது அந்த கும்பலிடம் மாட்டிய அந்தோணியை அவர்கள் சரமாரியாக வெட்டினர். தொடர்ந்து பாம் ரவியை துரத்திச் சென்ற கும்பல், ராஜராஜன் வீதியில் இருந்து காளியம்மன் தோப்பு வீதிக்கு செல்லும் ஒரு குறுகிய சந்தில் மறித்து சரமாரியமாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த பாம் ரவியும், அந்தோணியும் ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்தனர். வெடிகுண்டு சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற, நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து முதலியார்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையறிந்த சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி லோகேஷ்வரன், எஸ்பி விஷ்ணுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இரட்டை கொலை தொடர்பாக விசாரித்தனர்.

இதே போல, வெடிகுண்டு நிபுணர்கள், தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த முதலியார்பேட்டை போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை நடந்துள்ளது. இருப்பினும் விசாரணைக்குப் பிறகே முழுத் தகவல் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x