Published : 10 Oct 2021 01:21 PM
Last Updated : 10 Oct 2021 01:21 PM

கரூர் அருகே குழந்தைகளுடன் தந்தை தற்கொலை முயற்சி: இரு சிறாரும் பலி; தந்தைக்கு சிகிச்சை

கரூர்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்ப, குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முசிறி தீயணைப்பு நிலையத்தினர் சடலங்களை மீட்டனர். தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் ஆதனூரை சேர்ந்தவர் முருகேசன் (30). பொக்லைன் ஆபரேட்டர். இவர் மனைவி ப்ரியா. இவர்களுக்கு ருதர்ஷனாஸ்ரீ (5). மகன் கிருஷ்ணா (3). கணவன், மனைவி இடையே நேற்று குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முருகேசன் நேற்றிரவு தனது குழந்தைகள் இருவரை அழைத்துக் கொண்டு கடவூர் உடையாபட்டி பகுதியில் உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் காயமடைந்த முருகேசன் அங்கு தொங்கிய கயிறு மூலம் கிணற்றிலிருந்து மேலே ஏறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் முசிறி தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றிலிருந்து குழந்தைகளின் சடலங்களை இன்று (அக். 10ம் தேதி) காலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x