Published : 22 Sep 2021 06:16 PM
Last Updated : 22 Sep 2021 06:16 PM

பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் 9 ஆண்டுக்குப் பின் பழிக்குப் பழியாக கொலை 

பசுபதிபாண்டியன் ஆதரவாளர்களால் திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட நிர்மலா. 

திண்டுக்கல் 

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பழிக்குப் பழியாக திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் வசித்து வந்தவர் பசுபதிபாண்டியன். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதாகக் கூறி ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா (69). இவர், இன்று காலை திண்டுக்கல் அருகே இ.பி.காலனியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிக்குச் சென்றபோது சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இவரது தலையைத் துண்டித்து சிறிது தூரத்தில் உள்ள பசுபதிபாண்டியன் கொலையான வீட்டின் முன்பு வைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்ஷா, முத்துப்பாண்டி ஆகியோர் அடுத்தடுத்து பசுபதிபாண்டியன் ஆதரவாளர்களால் பழிக்குப் பழி கொலை செய்யப்பட்டனர். தற்போது ஐந்தாவதாக நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவலறிந்த திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி, மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர், நிர்மலா கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டதில் சிறிது நேரம் ஓடிச்சென்று நின்றது. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x