வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி புகார்: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு

சிவசங்கர் பாபா: கோப்புப்படம்
சிவசங்கர் பாபா: கோப்புப்படம்
Updated on
1 min read

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மற்றொரு மாணவியின் தாயார் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில், தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது 3-வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவைக் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக, நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் ஜூன் 18-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்தத் தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஆன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தற்போது பெங்களூருவில் வசிக்கும் அந்த மாணவியின் தாயார் அளித்த பாலியல் புகாரின் பேரில், சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு புகார்களின் பேரில் தனித்தனியாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in