Last Updated : 08 Jul, 2021 09:54 AM

 

Published : 08 Jul 2021 09:54 AM
Last Updated : 08 Jul 2021 09:54 AM

அரசு வேலை ஆசை; 17 பேரிடம் ரூ.35 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 17 பேரிடம் ரூ.35 லட்சத்தை மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (47). விவசாயியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலம் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் சகோதரி மகனான சென்னையில் அசோக் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் ரமேஷ்பாபுவுக்கு (45) அறிமுகமானார்.

அப்போது குணசேகரன், பாக்யராஜ் ஆகிய இருவரிடமும் ரமேஷ்பாபு, தன்னுடைய சித்தி சரோஜா மூலமாக, யாராவது அரசுப்பணியில் சேர விரும்பினால் அவர்களின் நேர்காணல் அட்டையை கொடுத்தால் அரசு பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட தொகையை பெற்று உறுதியாக வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை குணசேகரன் தனது உறவினர் மற்றும் தெரிந்த 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகிய அரசு வேலைகளுக்காக ரமேஷ்பாபு கூறியபடி, அவரது வங்கி கணக்கிலும், அவரது முதல் மனைவி சூரியவர்ஷினி, 2-வது மனைவி ரேவதி, ரமேஷ்பாபுவின் மாமா சவுந்தர்ராஜன் ஆகியோரின் வங்கி கணக்கிலும் மற்றும் ரேவதி, ரமேஷ்பாபு ஆகியோரிடம் நேரடியாகவும் என, மொத்தம் ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்ற ரமேஷ்பாபு உள்ளிட்டோர், கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கண்ட 17 பேருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் குணசேகரன், பலமுறை ரமேஷ்பாபுவை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர்கள் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில், தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படியும் கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ்பாபு, அவர்கள் 17 பேருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுபற்றி மீண்டும் கடந்த 20.3. 2021 அன்று ரமேஷ்பாபுவை குணசேகரன் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பணம் பெற்ற விவரத்தை பற்றி யாரிடமும் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக ரமேஷ்பாபு மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து, குணசேகரன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

அதன்பேரில், ரமேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 07) டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸார், ரமேஷ் பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x