Published : 02 Jul 2021 03:39 PM
Last Updated : 02 Jul 2021 03:39 PM

காட்பாடி வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 42 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடி வழியாகக் கேரள மாநிலத்துக்கு ரயிலில் கடத்த முயன்ற 42 கிலோ கஞ்சா பார்சலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கி நேற்று இரவு புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில் இன்று அதிகாலை ரேணிகுண்டா வழியாகக் காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் தேப்ராத் சத்பதி தலைமையிலான காவலர்கள் மற்றும் ரயில்வே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த நான்கு பெரிய பைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த பைகளுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் கவனத்துடன் பிரித்துப் பார்த்தபோது கஞ்சா பார்சல்கள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்த காவலர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து எடை பார்த்ததில் சுமார் 42 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.டி.ராமச்சந்திரன் வசம் கஞ்சா பார்சலை ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று காலை ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கடத்தல் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவினரும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x