Last Updated : 01 Jul, 2021 06:17 PM

 

Published : 01 Jul 2021 06:17 PM
Last Updated : 01 Jul 2021 06:17 PM

மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 904 மது பாட்டில்கள் பறிமுதல்: உடுமலையில் மூவர் கைது

மதுரையிலிருந்து கோவைக்கு காரில் கடத்திய 904 டாஸ்மாக் மது பாட்டில்களை குண்டடம் அருகே போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்தனர்.

கரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்த காரணத்தால் பொதுப் போக்குவரத்து, மளிகை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மளிகைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.

இதனால் அருகிலிலுள்ள திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து டாஸ்மாக் பாட்டில்களை மொத்தமாக வாங்கிக் கடத்தி வந்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு (ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.700 வரை) விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. அதை நிரூபணம் செய்வதுபோல ஆங்காங்கே பிராந்தி பாட்டில்களைக் கடத்திச் செல்வோரை போலீஸார் பிடித்து, பாட்டில்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை குண்டடம் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீஸார், தாராபுரம் திருப்பூர் ரோட்டில் குண்டடம் அடுத்துள்ள கோவை ரோடு பிரிவு செக்போஸ்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கோவை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். உள்ளே ஏராளமான அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்து பார்த்தபோது அனைத்து பெட்டிகளிலும் டாஸ்மாக் பாட்டில்கள் இருந்தன.

உடடியாக காரை குண்டடம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று, காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முலையூரைச் சேர்ந்த கண்ணன் (55), மதுரை மாவட்டம் மேலூர் கருஞ்சாலக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (32), கருங்சாலக்குடியைச் சேர்ந்த ராஜாமுகமது (23) என்பது தெரிய வந்தது.

இவர்களில் கண்ணன், சிலம்பரசன் ஆகியோர் கோவை மாவட்டத்தில் பிராந்திக் கடை பார்களில் வேலை செய்பவர்கள் என்பதும், அவர்கள் மதுரையிலிருந்து கோவைக்கு டாஸ்மாக் பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. ராஜா முகமதுவின் காரை வாடகைக்குப் பேசி மது பாட்டில்களை ஏற்றி சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கடத்திச் சென்ற 904 பிராந்தி பாட்டில்கள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். ஒரே காரில் 904 மது பாட்டில்கள் பிடிபட்டிருப்பது குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x