தந்தை தாக்கப்பட்டதாகக் கூறி இளம்பெண் போராட்டம் எதிரொலி: உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தந்தை தாக்கப்பட்டதாகக் கூறி இளம்பெண் போராட்டம் எதிரொலி: உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Updated on
1 min read

தென்காசி அருகே, தந்தை தாக்கப்பட்டதாகக் கூறி இளம்பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை, தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (49). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டுக்கு இருச்சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறி பிரான்சிஸ் அந்தோணி மீது புளியரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரான்சிஸ், தன்னை போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தனது மகள்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் பிரான்சிஸ் மகள் அபிதா (24) செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

தனது தந்தையை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது தந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு போலீஸார் கட்டாயப்படுத்துவதாகவும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினர் மற்றும் செங்கோட்டை போலீஸார் செல்போன் டவரில் ஏறி, அபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்பி கிருஷ்ணராஜ், ஏடிஎஸ்பி கலிவரதன், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் இரவு 9.30 மணிக்கு மேல் அபிதா சமாதானம் அடைந்தார். இதையடுத்து, அவர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அவர், முதலுதவி சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார் மீது அபிதா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பியிடம் கேட்டபோது, “குற்றச்சாட்டுக்கு ஆளான புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர் மஜீத் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், தென்காசி டிஎஸ்பி விசாரணை நடத்துவார். அந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2018-ம் ஆண்டு அபிதாவின் மாமனார் வெட்டப்பட்ட சம்பவத்தில் அபிதா மற்றும் அவரது தந்தை பிரான்சிஸ் மீது சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in