தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையைக் கடத்திய 4 பேர் கைது

தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையைக் கடத்திய 4 பேர் கைது
Updated on
1 min read

தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையைக் கடத்திய நான்கு பேரை போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்மணியின் மனைவி மாலினி (20). இவர் பிரசவத்திற்காகக் கடந்த 18ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 19ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் 20ஆம் தேதி மாலினி பிரசவ வார்டில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது குழந்தை மாயமானது. இதுகுறித்து மாலினியின் கணவர் அருள்மணி தர்மபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அரசு மருத்துவமனையின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

எனவே கடத்தப்பட்ட குழந்தையை மீட்க தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் தருமபுரி அடுத்த பிடமனேரி பகுதியை சேர்ந்த தம்பதி உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜான்பாஷா (24). இவர் மனைவி தன்ஜியா (20). சில முறை கருவுற்ற தன்ஜியாவுக்குக் கரு கலைந்துள்ளது. எனவே குழந்தை ஆசையில் இவர்கள் இருவரும் திட்டமிட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து மாலினியின் குழந்தையைத் திருடிச் சென்றனர்.

மேலும், திருடிச் சென்ற குழந்தையை தருமபுரி மாவட்டம் இண்டூரில் உள்ள, தன்ஜியாவின் தாய் ரேஷ்மா (41) வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இதற்குத் தன்ஜியாவின் பாட்டி பேகம் (60) என்பவரும் துணையாக இருந்துள்ளார்.

எனவே இவர்கள் நான்கு பேரையும் கைது செய்த தனிப்படை போலீஸார் அவர்களிடமிருந்து மாலினியின் குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலையில் இன்று (23.06.2021) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in