Published : 17 Jun 2021 08:25 PM
Last Updated : 17 Jun 2021 08:25 PM

கலப்பட கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கல்: உடன்குடியில் 1,845 மூட்டை வெள்ளை சர்க்கரை பறிமுதல்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,845 வெள்ளை சர்க்கரை மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வு செய்த 5 ஆலைகளிலும் கலப்படத்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 (67 டன்) வெள்ளை சர்க்கரை மூட்டைகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்து, உரிய ஆணைகளை உரிமையாளர்களிடம் வழங்கினர். இதன் மதிப்பு சுமார் ரூ.23.25 லட்சம் ஆகும்.

மேலும், இவர்களுக்கு வெள்ளை சக்கரை விநியோகம் செய்த உடன்குடியில் உள்ள ஒரு மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்நிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டதும், அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் கலப்படத்துக்கு விநியோகம் செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 505 (25 டன்) வெள்ளை சர்க்கரை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ. 8.5 லட்சம்.

சம்பந்தப்பட்ட ஆலைகள் மற்றும் சர்க்கரை விற்பனை நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதேபோல் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் வெள்ளை சக்கரையை கலப்படத்துக்கு மீண்டும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரட்டிப்பு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாவது முறையாக கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆலைகளில் வெள்ளை சக்கரை பறிமுதல் செய்யப்பட்டால், அந்நிறுவனங்களது உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தாயாரிப்பாளர்களுக்கு வெள்ளை சர்க்கரை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x