Last Updated : 17 Jun, 2021 03:39 PM

 

Published : 17 Jun 2021 03:39 PM
Last Updated : 17 Jun 2021 03:39 PM

இறந்தது தெரியாமல் அண்ணனின் உடலுடன் வசித்த மனநிலை பாதிக்கப்பட்ட தங்கை: மதுரையில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

மதுரை

மதுரை அருகே இறந்தது தெரியாமல் அண்ணன் உடலுடன் மனநிலை பாதித்த தங்கை வசித்துள்ளார். அழுகிய நிலையில் உடலை போலீஸார் மீட்டனர்.

மதுரை அருகே விளாச்சேரி முனியாண்டிபுரத்திலுள்ள தர்மசாஸ்தா விகார் அபார்ட்மெண்டிலுள்ள யமுனா பிளாக்-கில் வசித்தவர் ஜெயச்சந்திரன் (60). மனநிலை பாதிக்கப்பட்ட இவரது சகோதரி பெயர் சுப்புலட்சுமி (55). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சொந்த தொழில் புரிந்த ஜெயசந்திரன் தனது சகோதரியுடன் முனியாண்டிபுரம் அபார்ட்மெண்ட் வீட்டில் வசித்தார்.

இவருக்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் இடம், வீடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரிக்காகவே அவர் திருமணம் செய்யாமல் தியாக வாழ்கை வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் வசித்த ஜெயச்சந்திரனின் மூத்த சகோதரி சரோஜினி இறந்த நிலையில், அவரது கணவர் சவுந்திரராஜன் அடிக்கடி மைத்துனரிடம் பேசி, நலம் விசாரிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

இதன்படி, கடந்த 2நாளாகவே ஜெயச்சந்திரனுக்கு போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. சந்தேக மடைந்த சவுந்திரராஜன் ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு ஜெயச்சந்திரன் வீட்டில் வேலை பார்த்த பாண்டியம்மாள் என்ற பணிப்பெண்ணுக்கு நேற்று காலை பேசி, விவரத்தை கூறி வீட்டில் சென்று பார்க்கச் சொல்லி இருக்கிறார்.

இதன்பின் பாண்டியம்மாள் அபார்ட்மெண்ட் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, ஜெயச்சந்திரன் இறந்து அவன் ரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அண்ணன் இறந்தது கூட, தெரியாமல் சுப்புலட்சுமி அவரது உடலுடனேயே வீட்டில் இருந்ததும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாண்டியம் மாள் சவுந்திரராஜனுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் லிங்கப்பாண்டி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜெயச்சந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சுப்புலட்சுமியை மீட்டு பக்கத்து வீட்டில் ஒப்படைத்து, அவரது உறவினர்கள் வரும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க போலீஸார் ஏற்பாடு செய்தனர். உயிரிழந்த ஜெயச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் போன்ற சில பாதிப்பு இருந்த நிலையில், அவர் வீட்டுக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மரணத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x